ஈஷா சார்பில் சிறை கைதிகளுக்கு யோகா வகுப்பு

சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், கடலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் (Sub jails) இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.

சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’, ‘சூரிய சக்தி’, ‘உப யோகா’ ஆகிய யோக பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் பல சிறை கைதிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறைகளில் வகுப்பு எடுத்த ஈஷா யோகா ஆசிரியர்கள் கூறுகையில், கடலூர் சிறையில் யோகா வகுப்பு நடத்தும் போது 19, 20 வயது மிக்க இளைஞர்கள் சிலர் விருப்பமின்றி முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால், 3-வது நாள் வகுப்பு முடித்த பிறகு அதற்கு முற்றிலும் நேர் எதிராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இது போன்ற யோகா வகுப்பில் நாங்கள் முன்பே கலந்து கொண்டு இருந்தால் இப்படி சிறைக்கு வந்திருக்கமாட்டோம். பரவாயில்லை. இப்போதாவது இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது இந்த வகுப்பு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

அதேபோல் கைதி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, “நான் பெயிலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். எல்லா நாட்களும் எப்போது பெயில் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருந்த நான், முதல் நாள் வகுப்பு முடித்த பிறகு இவ்வகுப்பு முடிவதற்கு முன் பெயில் கிடைத்து விடாது கூடாது என கடவுளிடம் வேண்டி கொண்டேன்.

ஏனென்றால், நான் வெளியில் இருந்து இருந்தால் இதுபோன்ற வகுப்பில் கட்டாயம் கலந்து கொண்டு இருக்கமாட்டேன். நான் வேண்டி கொண்டப்படியே பெயில் கிடைக்கவில்லை. 3 நாள் வகுப்பை நான் முழுமையாக நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.

1992-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 40,000 சிறை கைதிகள் இவ்வகுப்புகளால் பயன்பெற்றுள்ளனர்.