தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது காவல் கண்காணிப்பாளரை பாராட்டிய மக்கள்

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் இன்று சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட முபாரக் அலி (29), ஜெகநாதன் (27) மற்றும் சரவணன் (24) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ‌1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்றார். பணத்தை மீட்பதற்கு உந்துகோளாக இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாராட்டும் விதமாக பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்து களவு போன சொத்துக்களை மீட்ட தனிப்படை காவல்துறையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.