கோவையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் ஸ்டார், தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் கேக் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் அலங்கார குடில்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவையில் உள்ள கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை துவங்கியுள்ளது.

குழந்தை இயேசுவை வரவேற்கும் வகையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கிறிஸ்தவர்கள் வீடுகளில் வாசல் முன்பு கிறிஸ்துமஸ் ‘ஸ்டார்’ கட்டப்படும். மேலும், குடில்களில் இயேசு கிறிஸ்து, மரியன்னை உள்ளிட்டோரின் திருவுருவ சிலைகள் அமைக்கப்படுகின்றன.

கடை வீதிகளில் கிறிஸ்துமஸ் அலங்கார ஸ்டார் 5 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் மரம் 50 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் 20 ரூபாய் முதல் கிடைக்கிறது. கிறிஸ்து திருவுருவச்சிலைகள் 300 ரூபாய் முதல் கிடைக்கிறது. அலங்கார மணி 20 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடி 20 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் வாடிக்கையாளர்கள் தற்போது முதலே இந்த அலங்காரப் பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.