இலவச பேருந்துகளில் அரசு பெயரை தவறாக சித்தரிக்கின்றனர் – சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர்

– சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், ஆட்சியர் சமீரன் முன்னிலையில் குழு உறுப்பினர்கள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் பார்க், உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலை சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம், ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின், புதிய துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சுங்கம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து குழுவினர் பணிமனையில் பேருந்துகள் தூய்மை செய்யப்படுவதை பார்வையிட்டனர். பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுத்தமாக செல்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை போக்குவரத்து பணிமனையில் எத்தனை பேருந்துகள் வருகிறது? எப்படி சுகாதாரமாக உள்ளது. சர்வீஸ் எப்படி உள்ளது. சர்வீஸ் செய்ய போதுமான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். அரசு செயலாளர் குழுவினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் உள்ளோம். இன்னும் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த சுங்கம் பணிமனைக்கு 72 வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் வாகனங்களுக்கு தேவையான சர்வீஸ் எக்யூப்மென்ட் உள்ளதா என்று பார்த்து, தேவை இருந்தால் அதற்குண்டான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். கோவை மாநகரில் உள்ள 7சி பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் வழித்தடத்தில் இயங்காதது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்துகளை நிறுத்த வாய்ப்பு இல்லை.
இந்த விவகாரத்தை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பார்வைக்கு எடுத்துச் செல்கிறோம்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு இலவச பேருந்தை நமது அரசு கொடுத்துள்ளது.
அரசாங்கத்தின் நோக்கம் அரசு பேருந்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது. சிலர் இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரைக் கெடுக்க தவறாக சித்தரிக்கின்றனர் எனக் கூறினார்.