பாமக தலைமையில் ஆட்சி கனவா, கானல் நீரா?

2026 பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் அதற்கேற்ப வியூகம் என்ற பாமகவின் அரசியல் நிலைப்பாடு எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, 2026 பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி, பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான வியூகத்தை 2024 மக்களவைத் தேர்தலில் அமைப்போம் என அளித்த பதில் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல்லில் அண்மையில் நடந்த அதிமுக பொன்விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால், சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும், அதை பாஜக நிரப்ப வேண்டும் என்றும் பேசிவிட்டுச் சென்றார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என பேசி வருகிறார். இப்போது பாமகவும் புதிய வியூகத்தை அறிவித்திருப்பது  இபிஎஸ்.,இன்  மெகா  கூட்டணி அறிவிப்புக்கு  பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி அரசியலில் பாமக இதுவரை கடந்து வந்த பாதையை ஆய்வு செய்தால் இந்த வியூகத்தை இப்போது ஏன் பாமக எடுக்கிறது என்பதை துல்லியமாக கணக்கிடலாம்.

திராவிட கட்சிகளுடன் முதல் முறையாக 1998 மக்களவைத் தேர்தலில் கூட்டணி (அதிமுக) சேர்ந்த பாமக, 1999 மக்களவைத் தேர்தலில் திமுக, 2001 பேரவைத் தேர்தலில் அதிமுக, 2004 மக்களவைத் தேர்தலில் திமுக, 2006 பேரவைத் தேர்தலில் திமுக என 5 தேர்தல்களில் கூட்டணியில் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவே வலம் வந்தது.

 

தனித்தோ, கூட்டணியோ எப்படி களம் இறங்கினாலும், 30 ஆண்டுகளாக 5.5 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்திருந்த பாமக தனது வாக்கு வங்கியை 3.8 சதவீதத்தில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு மீட்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில், அது அன்புமணியின் எதிர்கால அரசியலுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும்.

 

வெற்றிக்கூட்டணியை உருவாக்கி வந்த பாமக இடம்பெற்ற 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி, 2011 பேரவைத் தேர்தலில் திமுக அணி தோல்வியையே தழுவியது.

முழுமையாக வன்னியர் வாக்குகளால் எழுச்சிப்பெற்ற பாமகவுக்கு எதிராக 70 சதவீத பிற சமூக வாக்குகள் திரும்பியதால் 12 ஆண்டுகளாக பாமக தோல்வி வளையத்திலேயே உள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தருமபுரி மக்களவைத் தொகுதியில் திராவிட கட்சிகள் துணையின்றி அன்புமணியால் வெற்றிபெற முடிந்தது. இருப்பினும் மாநில அளவில் அந்த அணி தோல்வியையே தழுவியது.

2016 பேரவைத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களம் கண்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததாலும் 5.5 சதவீத வாக்கு வங்கியை பாமக தக்கவைத்துக்கொண்டது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணிக்குச் சென்ற பாமக மீண்டும் தொடர் தோல்வி வளையத்தில் சிக்கித்தவிக்கிறது. அத்தோடு பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாக சுருங்கியிருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் தொடர்ந்து தனித்து களம் இறங்கி இருந்தால் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்கு வங்கியை பாமகவால் பெற்றிருக்கக்கூடும். 2016 பேரவைத் தேர்தலில் 1.3 சதவீதத்தை எடுத்த நாம் தமிழர் கட்சி, இருபெரும் ஆளுமைகள் மறைவுக்குப்பின் தொடர்ந்து தனித்து களம் இறங்கி 2019 மக்களவைத் தேர்தலில் 3.97 சதவீதமாகவும், 2021 பேரவைத் தேர்தலில் 6.85 சதவீதமாகவும் வாக்கு வங்கியை உயர்த்திருக்கிறது. ஆனால், தவறான அரசியல் வியூகத்தால் பாமகவின் வாக்கு வங்கி சுருங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தொடர் தோல்வி வளையத்தில் இருக்கும் பாமகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய பெரும் சவால் பாமகவின் புதிய தலைவர் அன்புமணி ராமதாசுக்கு காத்திருக்கிறது. 2021 பேரவைத் தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்தபின்னர் கணிசமான வன்னியர் வாக்குகள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் மீறி எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை மையமாக வைத்து அதிமுக பின்னால் திரண்டு நிற்கிறது.

2021 பேரவைத் தேர்தலுக்கு பின் வந்த விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் (வடதமிழகத்தில் 7 மாவட்டங்கள்), நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வாக்குச்சாவடி வாரியாக அதிமுக, பாமகவுக்கு விழுந்த வாக்குகளை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியவரும்.

3.8 சதவீதத்தில் இருக்கும் பாமக தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டுமெனில் வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளை ஒருமுகப்படுத்தி தன் பக்கம் திருப்ப வேண்டும், திமுகவில் வீரபாண்டி ஆறுமுகம் இருந்ததைவிட, அதிமுகவில் குறிப்பாக வடதமிழகத்தில் கூடுதல் அதிகாரமிக்க சக்தியாக திகழும் சி.வி.சண்முகத்தையும் மீறி வாக்கு வங்கியை பாமக பலப்படுத்துவது சவால் தான்.

தனித்தோ, கூட்டணியோ எப்படி களம் இறங்கினாலும், 30 ஆண்டுகளாக 5.5 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்திருந்த பாமக தனது வாக்கு வங்கியை 3.8 சதவீதத்தில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு மீட்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில், அது அன்புமணியின் எதிர்கால அரசியலுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும்.

மேலும், 2021 பேரவைத் தேர்தலில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே அதிமுக, பாமக கூட்டணி கைகொடுத்ததால் அங்கு 4 தொகுதிகளில் பாமக வென்றது. வட மாவட்டங்களில் பாமக வலுவாக உள்ள 65 தொகுதிகளில் மயிலம் தொகுதியில் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது.   திமுக கூட்டணியில் சேர மிக குறைந்த வாய்ப்பே  உள்ளதால் மீண்டும் தனித்து  களம் இறங்கினால் தான் பாமகவின் வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

2026  பேரவைத்  தேர்தலில் ஆட்சியை பிடிக்க அன்புமணி ராமதாஸ் புதிய வியூகம் அமைத்திருக்கிறார்.  வடதமிழகத்தில் 65 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால் கர்நாடகத்தில் குமாரசாமி எப்படி முதல்வர் பதவியை கைப்பற்றினாரோ அதேபோல அன்புமணியும் கைப்பற்றுவார். ஜெயலலிதா,   கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத சூழ்நிலை பாமகவுக்கு நிச்சயம் சாதகமாக மாறும் என்கிறார் பாமக வழக்குரைஞர் அணித் தலைவர் பாலு.

இது  குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தங்கள்  கட்சி  தொண்டர்களை உற்சாகப்படுத்த  அன்புமணி அதுபோல  பேசுவது  இயல்பு தான். இபிஎஸ்  தலைமையில்  அதிமுக வலுவாக இருப்பதால் 2026  பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி  அமையும்.  கர்நாடக அரசியல் சூழல் இங்கு இல்லை என்றார்.

1957 பேரவைத் தேர்தல் முதல் திமுகவுடன் பின்னி பிணைந்து திரண்டு நின்ற வன்னியர் வாக்கு வங்கியில் கணிசமான பகுதியை 1989 மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் வெளியே கொண்டு வந்து இப்போது  வரை  அதை  தக்கவைத்திருக்கிறார்.

10.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதிமுக பின்னால் திரண்டு நிற்கும் கணிசமான வன்னியர் வாக்குகளை இபிஎஸ், சி.வி.சண்முகத்தை மீறி ராமதாஸ், அன்புமணியால் திரட்ட முடியுமா?,  அதற்கான பாமகவின் புதிய வியூகம் வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க  வேண்டும்.