மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்ட காவல்துறையினர்

கோவை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து மாஸ் கிளினிங் தூய்மை பணிகளை மேற்கொண்ட மாநகர காவல்துறையினரின் செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில், கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர், ஆர் எஸ் புரம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து உக்கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் மாஸ் கிளினிங் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மாநகர காவல்துறை, மாநகராட்சி பணியாளர் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யுனிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதையும் தூய்மை செய்தனர்.

அப்பகுதியில் கிடந்த குப்பைகள் தேவையின்றி வளர்ந்திருந்த களை செடிகளை அப்புறப்படுத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு அப்பகுதியை மாஸ் கிளினிங் செய்தனர்.

தூய்மை பணி என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும், பொதுமக்களும் அவர்களது பங்களிப்பை வழங்கலாம். நம் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான முயற்சியை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.