ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட என்.ஐ.சி.யூ பிரிவு துவக்கம்

உலக குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) துவக்கம் செய்யப்பட்டது.

நவம்பர் 17 உலகக் குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறை மாத குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை, பிரச்சனைகளை எடுத்துச் செல்லும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அத்துடன் குறை மாத காலத்தில் பிறந்த குழந்தைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக ‘நம்பிக்கை மதில்’ எனும் பகுதியை அந்த பிரிவின் அருகே மருத்துவமனை துவக்கி வைத்துள்ளது.

கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் முழுமையடையாமல், சில காரணங்களால் அதற்கு முன்னரே பிறந்துவிடும் குழந்தைகளைத் தான் குறை மாதக் ( Preterm Babies) குழந்தைகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. உலகில் குறைமாத காலத்தில் பிறக்கும் ஐந்து குழந்தைகளின் ஒரு குழந்தை இந்தியாவில் பிறக்கிறது.

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் துவங்கப்பட்டிருக்கக் கூடிய பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை குறைமாத காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான 24 மணி நேர சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பு சேவைகளை சிறந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் படி முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. குறைவான காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அதிநவீன மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகள் இந்த பிரிவில் வழங்கப்படும்.

‘நம்பிக்கை மதில்’ எனும் சுவற்றில் குறைமாத காலத்தில் பிறந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த சுவர் மூலம் இப்படி பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் குறைவான காலத்தில் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு நம்பிக்கையும் கிடைக்கும் என்று மருத்துவமனை கருதுகிறது.