கே.பி.ஆர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரின் தலைவர் கே.பி ராமசாமி வழிகாட்டுதலில் கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமயில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தன்னம்பிக்கை பேச்சாளரும், கவிஞருமான, சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலாமாண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இவ்விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை ஷ்னீடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் மனித வள தொழில்முறை பங்குதாரர் ஹரிபிரசாத், நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு உரையாற்றினர்.

விழாவில் சிறப்பு விருந்தினர் பனிரெண்டாம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்த கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கல்லூரியின் முதல்வர் அகிலா துவக்க உரையாற்றினார், அப்போது கடந்த ஆண்டு மாணவர்கள் புரிந்த சாதனைகள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றதையும் பட்டியலிட்டார். மேலும் 21 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக எல்&டி, கோர்சீரா, நாஸ்காம் போன்ற ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வகுப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கல்லூரி வளாகத்தில் சுமார் 10 கோடி செலவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய, பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரி கல்வி உதவித்தொகை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மைச் செயலர் நடராஜன், அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருங்கள்!

சிறப்பு விருந்தினர் கவிதாசன் சிறப்புரையாற்றும் போது: தொழில் துறையினர், பொறியியல் மாணவர்களிடத்தில் எதிர்பார்க்கும் திறன்களை பற்றி குறிப்பிட்டார். மேலும் உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மூன்று தலைமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விட மிக வேகமான மாற்றம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. எனவே வேகமாக வளரும் மாற்றங்களை எதிர்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிறந்த திறன்களை வளர்ப்பது போல் தங்கள் சிறந்த குண நலன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இக்கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட தரமான கல்வி சூழலை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் அனைத்து விதத்திலும் சிறந்த வல்லுனர்களாக பட்டம் பெற்று வருவதற்கு தேவையான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இக்கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

வாழ்க்கையின் லட்சியத்தை வரையறுங்கள்!

கௌரவ விருந்தினர் மரபின் மைந்தன் முத்தையா உரையாற்றும் போது: மாணவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும், இலட்சியத்தையும் வரையறுத்து அதை அடைவதற்கான குறிக்கோளோடு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டையும், சமுதாயத்தையும் மேம்படுத்துங்கள்!

மற்றொரு கௌரவ விருந்தினர் ஹரிபிரசாத் உரையாற்றும் போது: இங்கு பயிலும் மாணவர்கள் சிறந்த பொறியாளர்களாக வர வேண்டும். ஒரு சிறந்த பொறியாளரின் முதன்மையான அக்கறை இந்த நாட்டையும், சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார். மாணவர்கள் தங்கள் படிக்கும் பாடத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.