இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக – அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்

– அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்

கோவை குனியமுத்தூரில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா தர்காவில் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டியும், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.

39 வது மாவட்டமாக கோவைக்கு வந்துள்ளேன். மிக அதிகமான தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய கட்சி அதிமுக. ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றுக்கும் மெக்கா மதினா செல்லவும், இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்து இருக்கின்றது.

கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார். திமுக ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது.

கோவை சாலைகள் குளங்களைப் போல காட்சியளிக்கின்றது. அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். 21 ஆண்டுகள் இப்தார் நோம்பை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர் ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.