மிளகாய் வற்றலுக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, மிளகாய் வற்றலுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

உலகளவில், மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதன்மையாக திகழ்கிறது. சீனா, தாய்லாந்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை முக்கிய மிளகாய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாகும்.

இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை ஆகிய வணிக பண்புகளுக்காக உலகப் புகழ் பெற்றது. இந்தியா மிளகாய் உற்பத்தியில் 80 சதவீதம் உள்நாட்டிலேயே நுகரப்படுகிறது. இந்தியாவில், 2021-22 ஆம் ஆண்டில் 6.94 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 18.66 லட்சம் டன் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது, இந்திய பரப்பளவில் 29 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள முக்கிய மசாலாப் பயிராகும். இந்தியாவில் மிளகாய் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (49%), கர்நாடகா (15%) மகாராஷ்டிரா (6%) மற்றும் தமிழ்நாடு (3%) ஆகியவை மிளகாய் சாகுபடியின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 75 சதவீதமாகும்.

இந்தியா, 2021-22-ஆம் ஆண்டில் 5.57 லட்சம் டன் மிளகாயை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மிளகாய் முக்கியமாக சீனா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 0.55 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 0.25 லட்சம் டன் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டது. மிளகாய் வற்றல் முக்கியமாக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் முண்டு மற்றும் சன்னம் ஆகியவை முக்கிய இரகங்களாக பயிரிடப்படுகிறது. இவை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, நல்ல தரமான மிளகாய் போதிய அளவில் வரத்து இல்லாததால் ஏற்றுமதி தேவை பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மகசூல் வெகுவாக குறைந்ததாகவும், கடந்த ஆண்டை விட சாகுபடி பரப்பு அதிகரித்த போதிலும் உற்பத்தி குன்றியதாக அறியப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலி சந்தையில் நிலவிய மிளகாய் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிபடையில், அறுவடையின் போது தரமான சன்னம் இரக மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை குவிண்டாலிற்கு ரூ.17500/- முதல் ரூ.18000/- வரை இருக்கும் என கணிக்கபட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.