வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்!

– கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கோவை மாநகராட்சியில் நூறு 100 வார்டுகளிலும் 846 பகுதி சபை அமைக்கப்பட்டு பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். இதற்கு முன்னர் பொதுமக்கள் மத்தியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, இந்த நகர சபை கூட்டங்கள் மூலம் பொது மக்கள் கோரிக்கைகளை, குறைகளை கேட்டு அறிந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்று சீரிய நோக்கத்தோடு தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார்.

கோவையில் 846 பகுதி சபா அமைக்கப்பட்டு மக்கள் சபை கூட்டம் நடந்து வருகிறது. 12 மாதத்தில் ஆறு கூட்டம் நடைபெற்றுள்ளது. முதல்வர் கோவையில் 25,000 மனுக்களுக்கு உத்தரவை வழங்கினார். முதல்வரால் 200 கோடிக்கு கோவைக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

211 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். கோவைக்கு இன்னும் பல திட்டங்கள் முதல்வர் வழங்க உள்ளார். முதல்வர் கோவையில் 10 தொகுதியிலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பார்க்காமல் திட்டங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களிடம் பேசும்போது: கோவையில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முதல்வரால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளனர். மின்வாரியமும் தயார் நிலையில் உள்ளது.

பிஜேபியின் மாநில தலைவர் அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது. நாங்கள் கோமாளி சொன்னது போல ஏதாவது கருத்து சொல்லி உள்ளோமா..? பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசு தற்போதைய தமிழக அரசு என அவர் தெரிவித்தார்.