தொழில் மற்றும் வியாபாரத்தில் நிரந்தர கொள்கை வேண்டும்!

– முன்னாள் லஞ்ச ஒழிப்பு ஆணையர் பேச்சு

தொழில் மற்றும் வியாபார நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் நடைபெற்றது. மத்திய லஞ்ச ஒழிப்பு முன்னாள் ஆணையாளர் கே வி.சவுத்ரி பங்கேற்று பேசினார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் (பிசினஸ் எத்திக்ஸ்) தொழில் வியாபார நெறிமுறைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வணிகவரித்துறை முதுநிலை ஆணையாளர் பூபால் ரெட்டி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு வரவேற்று பேசினார். கூட்டத்தில் வர்த்தக சபையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையாளர் கே.வி சவுத்ரி பங்கேற்று பேசியதாவது: தொழில் மற்றும் வியாபாரத்தில் நிரந்தர கொள்கை வேண்டும். அந்த கொள்கையை தொடர்ந்து கடைபிடிப்பதோடு அவற்றை முறையாக செயல்படுத்துக்கிறோமோ என்பதை கண்காணிக்க வேண்டும்.

பற்றாக்குறை காரணமாக கருப்பு பணப் பழக்கம் உருவாகிறது. உதாரணத்திற்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றவுடன் நாம் தக்கல் முறையை அணுகுகிறோம். இதற்கு நாம் கூடுதல் கட்டணத்தை செலுத்துகிறோம் இந்த நடைமுறை சரியானது அல்ல.

ஆனால் பற்றாக்குறையின் காரணமாக இவற்றை நாம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எந்தெந்த பயன்பாட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அவை அனைத்திலும் இது போன்ற விதிமுறை மீறல்கள் இருக்கின்றன. இதை சார்ந்து இருக்கும் தொழில் நிறுவனங்கள் முறை படுத்த வேண்டும்.

இந்திய தொழில் வர்த்தக சபை போன்று பெரிய அமைப்புகள் தொழில் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு ஒழுக்க நெறிகளை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

நிகழ்வின் இறுதியாக வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை நன்றியுரை ஆற்றினார். இதில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.