2017 இல் நடந்த சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களுக்கு மாநில பேரிட மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள் லதாவும் பாதிக்கப்பட்டார். இந்த விபத்து நடந்த நேரத்தில் அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட லதாவின் எதிர்கால நலன் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் உதவியாளர் பணியிடத்திற்கு தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதி பெற்றுள்ளதால் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் லதாவிடம் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.