“பந்த் என்ற பெயரில் மக்களை மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை”

– அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டத்துக்குப் புறம்பாக கடைகளை அடைக்கச் சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கோவையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டிஜிபியும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்த கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார்.

காவல்துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாகப் பேசியுள்ளார். எனவே அவருக்கு இந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தது எதன் அடிப்படையில் எவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல் அமைச்சர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பாஜகவினர் கூறியதனால் தான் என்.ஐ.ஏ விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.

கோவையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மூவாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியலாக நினைக்கும் பாஜக, முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்களா இல்லை அது சம்பந்தமாக ஏதாவது பேசினார்களா?

இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பாதிக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்படி செய்கின்றனர். இது தேவையற்றது.என்றார்.

பா.ஜ.க பந்த் அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்கச் சொன்னாலும் மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது மக்கள் யாரும் அச்சப்படவில்லை.

தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினர் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர் அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆனால் பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்யப் பார்க்கின்றனர். கோவையில் கடந்த 98 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் தற்போது நடந்த நிகழ்வையும் நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் அவதூறுகளைப் பரப்பி பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் உண்மைக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதைக் காட்டுகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் இதில் மாற்றமில்லை எனக் கூறினார்

இந்த பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.