தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தம்: கோவையில் தேங்கும் குப்பைகள்

கோவையில் தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் இருந்து தினமும் 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரம் ஆகிறது. இந்த குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் ஆட்சியர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4ம் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவது 25ம் தேதி முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், அந்த குப்பைகள் பல்வேறு பகுதிகளில் அகற்றப்படாமல் உள்ளன. தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பைத் தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனிடையே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.