ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய அமைச்சருக்கு பாராட்டு

கோவையில் பல்வேறு ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கவுரவித்தல் நிகழ்ச்சி அவினாசி சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஜவுளி உற்பத்தி அமைப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

ஜவுளித் துறை அமைச்சராக இருந்தபோது ஜவுளித் தொழிலுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக 15 க்கும் மேற்பட்ட முன்னணி ஜவுளித் தொழில் மற்றும் சைமா மற்றும் சிஐடிஐ உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் கௌரவத்தை அமைச்சர் இரானி ஏற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர், மத்திய அரசு சார்பில் ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நான் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது நாடு கொரோனா போன்ற பெரும் நோய்தொற்றை சந்தித்தது. அப்போது தான் பிபிஇ உடை தயாரிப்பை நாம் துவங்கினோம்.

கொரோனா தொற்று குறையும்போது நாம் உலக அளவில் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு உடை தயாரிப்பில் முன்னணியில் இருந்தோம். பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து கொடுத்தோம். இதுபோன்று ஜவுளித்துறை வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக நமது பிரதமர் விளங்கி வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. ஜவுளித்துறை வளர்ச்சிக்கான எந்தவிதமான கோரிக்கையாக இருந்தாலும் மத்திய அரசிடம் கொடுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதற்கான தீர்வை காண்போம். அதுதான் பிரதமருடைய எண்ணமும் ஆகும் என மத்திய அமைச்சர் பேசினார்.