வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு எத்தியோபியா நாட்டின் உயர்மட்டக் குழு வருகை

எத்தியோபியா நாட்டிலிருந்து, மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் மெல்லஸ் மெக்கோனென் ஐமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற் மூன்று தினங்களுக்கு வருகை புரிந்தது.

உலக வங்கியின் ‘இந்தியா–எத்தியோபியா பல்முனை வேளாண் விரிவாக்கம் பற்றிய அறிவு பரிமாற்றம்‘ என்ற திட்டத்தின் கீழ் இந்த உயர்மட்டக் குழு இந்தியாவிற்கு அக்டோபர் 9 முதல் 15 வரை கல்வி சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள, அரசு, அரசு சாரா அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வேளாண் விரிவாக்கப் பணிகள் பற்றி அறிந்து கொள்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன் எத்தியோபியா உயர்மட்டக் குழுவினை கோவையில் வரவேற்றார்.

கடந்த 10 ஆம் தேதி, இக்குழுவானது ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அரசு வேளாண்மைத் துறையின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்றனர். ஈரோடு மாவட்டத்தின் இணை வேளாண் இயக்குநர் சின்னுசாமி அக்குழுவினை வரவேற்று, அம்மையம் விவசாயிகள் பயன் கருதி மேற்கொள்ளும் விரிவாக்கப் பணிகள் மற்றும் வேளாண் திட்டங்கள் பற்றி விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து அக்குழுவின் உறுப்பினர்கள் அங்கு குழுமியிருந்த விவசாயிகளுடன் உரையாடி, அம்மையம் மேற்கொள்ளும் விரிவாக்கப் பணிகள், எவ்வகையான நன்மைகளை அடைந்தனர் என்பது பற்றி தெரிந்து கொண்டனர்.

அதன் பின்னர், அக்குழு ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள மைராடா நிறுவனத்தின் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அந்நிலையத்தின் தலைவர் அழகேசன், அக்குழுவினை வரவேற்று, அவர்கள் மேற்கொள்ளும் வேளாண் விரிவாக்கப் பணிகள் பற்றி கருத்துக்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலமாக விவரமாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துனணவேந்தர் கீதாலட்சுமி, அக்குழுவினரை சந்தித்து, எந்தெந்த வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் எத்தியோபியா நாட்டைச் சேர்ந்த வேளாண்மைத் துறையும் இணைந்து செயல்படலாம் என்று கலந்துரையாடினர்.

அந்த உயர்மட்டக் குழுவானது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள விவசாயி தகவல் மையம், தண்ணீரில் கரையக் கூடிய உரங்கள் தயாரிக்கும் வசதி, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பூச்சிகள் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றி அறிந்து கொண்டனர்.

மேலும், வேளாண் அறிவியல் நிலையங்கள், பூச்சி – நோய் கட்டுப்பாடு குறித்த அறிவுரைகள், வானிலை அறிவிப்புகள், உயிர்கட்டுபாடு காரணிகள், தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் விரிவாக்கப் பணிகள் போன்றவை குறித்து இப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்.