ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற கோரி வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெட்கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி சமீபத்தில் 5% – 18% ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதனை திரும்ப பெற கோரி பலமுறை வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சங்கத்தின் தலைவர் செளந்தர்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குறுந்தொழில் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், செளந்தர்மோகன் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேட்டியளித்த செளந்தர்குமார், மத்திய அரசு 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங்கில் வெட்கிரைண்டர் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தினர். அதனை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

மேலும் எங்கள் சங்கம் எந்த அரசை எதிர்த்ததும், அல்ல எந்த கட்சியையும் சார்ந்ததல்ல. ஜி.எஸ்.டி வரி உயர்விற்கு முன் கல் பிரச்சனை வந்தது. அதனை தொடர்ந்தே மூல பொருட்களின் விலை உயர்வு வந்தது. இதனால் மிக பெரிய அளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 18% ஜி.எஸ்.டி வரி உயர்வால் இன்னும் பாதிக்கப்படுகிறது. விலை உயர்வால் வாங்கும் மக்களும் குறைந்து விட்டனர் என தெரிவித்தார்.

இதனால் தங்களது வியாபாரம் உற்பத்தி அனைத்தும் குறைந்து இந்த தொழிலை நம்பி இருக்க கூடிய பெண்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.