“பாதங்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் பயணத்தை நிறுத்த மாட்டோம்”

– ராகுல் காந்தி

இந்தியாவை இணைப்போம் (பாரத் ஜோடோ) என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதங்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் தனது பயணத்தை நிறுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பாத யாத்தரையை தொடங்கியுள்ளார். சுமார் 3,500 கி.மீ. தூரம் கொண்ட இந்த பயணம் 150 நாட்களுக்கு நடைபெறும். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீரில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது.

இந்த நடை பயணத்தின் போது வழிநெடுகிலும் ராகுலுக்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர்.

4 நாட்கள் யாத்திரையை தமிழகத்தில் முடித்த ராகுல், கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கேரளாவில் தொடங்கினார். அங்கு 7 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

3 ஆம் நாளான நேற்று காலை 7.15 மணிக்கு கனியாபுரத்தில் ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கினார். அப்போது இடைவிடாமல் மழை பெய்தபோதும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் நனைந்தபடியே நடை பயணத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பயணம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டு, “பாதங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் நாட்டை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள நடைபயணத்தை நிறுத்த மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.