மாத உதவித் தொகையை ரூ.3000 ஆக உயர்த்த பார்வையற்றோர் இணையம் மனு

மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி தர ஆவணம் செய்ய கோரி தேசிய பார்வையற்றோர் இணையத்தை சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சுமார் 50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் தமிழக கிளையில் 5000 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை எனவும், அதனை 3000 ரூபாயாக உயர்த்தி தர வலியுறுத்தியும் பல மாதங்களாக போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரிடத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இருப்பினும் பல மாதங்களாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் உடனடியாக மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தர முதல்வருக்கு ஆவணம் செய்யுமாறு இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலககத்தில் இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர், ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் மனு அளித்தனர். முதல்வருக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் நகலையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.