கேட்சை தவற விட்டதால் பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்று ஆட்டம் நேற்று துபாயில் நடந்தது.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி. கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். இதையடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

ஆசிஃப் அலியின் கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும்.  அந்த கேட்சை விட்ட அரஷதீப் சிங்கை, களத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா பயங்கரமாக திட்டினார். இதையடுத்து இந்திய அணியின் இந்த தோல்விக்கு அர்ஷதீப் சிங்தான் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம், இக்கட்டான சூழ்நிலைகளில் இதுபோன்று தவறுகள் நடப்பது இயல்பானது தான் என்று அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

– பா .கோமதி தேவி