செக்கிழுத்தச் செம்மலுக்கு அமைச்சர் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சித்திரவதை செய்யும் நோக்கில் சிறையில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு இன்று வரை சிறை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இன்று அவரது பிறந்த நாளையொட்டி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்த், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கோவை சரகத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஊர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.