தேசிய ஊட்டச்சத்து மாதம்: அங்கன்வாடி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி மேற்கொண்டனர்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவானது செப்டம்பர் மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். இதில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி மேற்கொண்டனர்.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி, வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து வார விழாவை குறித்தும், சத்தான உணவுகள் குறித்தும் பதாகைகளில் ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.