ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் முந்தி விநாயகர்!

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களிலும், தங்களது வீடுகளிலும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்ட, ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய மூலவர் முந்தி விநாயகர் சிலை அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார்.

காலை முதலே கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் முந்தி விநாயகரை வழிபட குவிந்து வருகின்றனர்.