கோவையில் நேற்று பெய்த கனமழையில் மாங்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பல்வேறு மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை தடாகம் சாலை மாங்கரை பகுதியில் தைல மரம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலமானது மழை நீரால் முழுவதுமாக சேதம் அடைந்தது.
அதன் ஒரு பகுதி முழுவதுமாக மழையில் அடித்து செல்லப்பட்டு மழை நீர் தேங்கியதால் எதிரெதிர் புறங்களில் வந்த வாகனங்கள் அதனை கடக்க முடியாமல் நின்றன.
பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழை நீர் தேங்கி நின்ற இடத்தில் மண்ணை கொண்டு நிரப்பிய பின்பு போக்குவரத்து துவங்கியது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.