நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு 3 வது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

நேற்று பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைப்பாலம் மூன்றாவது முறையாக அடித்து செல்லப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில் வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூன்றாவது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் வானக போக்குவதரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.