“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்”

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சிலை அமைப்பது ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்துவதை உறுதி செய்ய கூறியும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகர மாவட்ட தலைவர் நேரு தாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், இந்து அமைப்புகள் பலரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக வெவ்வேறு அமைப்புகளின் பெயரால் பல இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி பெறுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என பலருக்கும் இரண்டு வார காலம் இடையூறுகளை சந்திக்க வேண்டி வரும்.

ஊர்வலத்தின் பொழுது சரக்கு வாகனங்களில் ஏராளமானவர் ஏறிக்கொண்டு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் செல்வதால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் அளித்துள்ள கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்து ஊர்வலத்தில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஊர்வலங்களில் விதிமீறல்கள் ஏதேனும் இருக்குமானால் அதனை வீடியோ பதிவு செய்வதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பும் வழங்குமாறும், விநாயகர் சிலைகள் ரசாயனங்களால் தயார் செய்யப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.