பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ‘தமிழ் கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான நெல்லை கண்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

1946 ஆம் ஆண்டு ந.சு. சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4 வது மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தமிழ் ஆர்வமும், பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். மேலும் இவர், ‘தமிழ்க்கடல்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு இளம் வயதிலேயே கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ள இவர், கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் நெல்லை கண்ணனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.