நீளும் பெருந்தொற்று கொரோனாவால் ஒரே வாரத்தில் 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

– உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

கொரோனோ வைரஸ் தொற்றால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 % அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், உலகில் கொரோனோ தொற்று பரவத் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் கொரோனா மறைவதற்கான அறிகுறி இல்லை. அதனுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வதும், குறைவதுமாக இருக்கிறது.

பெருந்தொற்று நீண்டுகொண்டே நாம் செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கைவிடக் கூடாது.

ஒரே வாரத்தில் 15 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தடுப்பு முறைகள் இத்தனை இருந்தும் 15 ஆயிரம் உயிரிழப்பு என்பது ஏற்றுக் கொள்ள இயலாதது. கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.

இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உடனே செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தவணை செலுத்தி இருந்தால் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் 59 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 9.3 கோடி பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் 4.4 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்றும், உலகம் முழுவதும் தடுப்பூசி பயன்பாடு சென்றடைந்தால் தான், புதிய வகை வைரஸ் உருமாற்றங்களைத் தடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.