உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக உலகம் முழுவதும் 7000 நகரங்களின் காற்று மாசு அளவு திரட்டப்பட்டன. அதில் உலகின் 6 பிராந்தியங்களில் 103 நகரங்களின் தரவுகள் மட்டுமே, அதிக மக்கள்தொகை கொண்ட தரவரிசையாக கருதப்பட்டன.

இதில், உலகின் மாசடைந்த நகரங்களில் டாப் 10 பட்டியலில் டெல்லி, கொல்கத்தா முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. நைஜீரியாவின் கனோ நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

காற்றில் இருக்கக்கூடிய தூசியின் அளவு 2.5 விட்டமாகவும், நாம் சுவாசிக்கும் அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது உலகச் சுகாதார அமைப்பின் நிர்ணயிக்கப்பட்ட விதி.

ஆனால், 2.5 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்கும் சுவாசிக்கக்கூடிய அளவுடைய துகள்கள் பற்றி சமீபகாலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காற்று மாசு ஆய்வு சராசரி மக்கள் தொகையுடன் மாசின் அளவை ஒப்பிட்டு கணக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி டெல்லியின் நிலவரம் ஒரு கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராம் என்ற உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது.

வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை, நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், சமையலுக்கு மற்றும் கட்டுமானத் துறைக்கான உயிரி எரிப்பு ஆகியவை காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பல்லவி பன்ட், உலகில் நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பொதுமக்களின் உடல் உபாதைகளும் அதிகரிக்கின்றது. உலக நாடுகள் ஆரம்ப நிலையிலேயே தலையிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றார்.

ஷாங்காய், மாஸ்கோ நகரங்களில் காற்றில் அதிக அளவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு கலந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த மாசு, மனிதர்களின் உயிருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.