கோவையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொது மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கலையரங்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மின்பகிர்மான கழகம் (TANGEDCO), தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழக நிறுவனம் (TANTRASCO), மாநில மின்சுமைப்பகுப்பு மையம்(SLDC) ஆகியவற்றின் மின்கட்டண விகித திட்டத்தின் படி 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டணத்தையும் மற்றும் இதர கட்டணத்தையும் நிர்ணயித்தல் ஆகிய மனுக்களின் மீது பொது மக்களிடையே கருத்து கேட்பு கேட்டப்படுகிறது.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர், சிறு குறு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை முன் வைத்தனர். மேலும் அவர்களது மனுக்களையும் பதிவு செய்தனர்.

இதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி, இயக்குனர் சீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.