ஊட்டச்சத்து குறைபாட்டால் கோவையில் 1,154 குழந்தைகள் பாதிப்பு

கோவை மாவட்டத்தில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 1.47 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சத்துமாவு, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிவது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி முருகேஸ்வரி கூறியதாவது:

கோவையில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஆய்வு 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும், 2-வது கட்டமாக ஆர்.பி.எஸ்.கே மருத்துவக் குழு மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்ட ஆய்வில் 20 ஆயிரம் குழந்தைகள் வயதுக்கேற்ற எடை, எடைக்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் குழந்தைகளையும் ஆர்.பி.எஸ்.கே மருத்துவக் குழு பரிசோதனை செய்தது. இவர்களில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை.

ஆனால், 1,154 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் கண்பார்வை குறைபாடு, காது கேளாமை, வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவர்களை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் மாவட்ட இடையீட்டு சேவை மையத்திற்கு சிகிச்சைப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான ஊட்டச்சத்து உணவு எடுத்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1,154 குழந்தைகளுக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனக் கூறினார்.