இந்தியாவில் யானைகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதா?

இந்தியாவில் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வேட்டையாடப்பட்ட யானைகளின் புள்ளி விவர தகவலை மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினர் ஒருவர், இந்தியாவில் யானை தந்தம் கடத்தப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா? தந்தத்திற்காக ஆண் யானைகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே பதில் அளித்துள்ளார்.

அதில், யானை தந்தங்கள் கடத்தியதாக கடந்த 2019 ம் ஆண்டில் 27 வழக்குகளும், 2020 ம் ஆண்டில் 21 வழக்குகளும், 2021ம் ஆண்டில் 42 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2018-19 ம் ஆண்டில் ஜார்க்கண்ட், மேகாலயா, தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 1 யானையும், ஒடிசா மாநிலத்தில் 2 யானை என மொத்தம் 6 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

2019-20 ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில் தலா 1 யானையும், மேகாலயா மாநிலத்தில் 4 யானைகளும் ஒடிசா மாநிலத்தில் 3 யானைகள் என மொத்தம் 9 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

மேலும், 2020-21ம் ஆண்டில் நாகலாந்து, ஒடிசா, தமிழ்நாடு தலா 2 யானைகளும், மேகாலயா மாநிலத்தில் 7 யானைகளும், கேரளாவில் 1 யானை என மொத்தம் 14 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 2018-19 ஆண்டில் 1 யானை வேட்டையாடப்பட்டுள்ளது. 2019-20 ம் ஆண்டில் எந்த யானையும் தமிழகத்தில் வேட்டையாடப்படவில்லை என்றும், 2020-21 ம் ஆண்டில் 2 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.