தங்கத்திலான நெற்றி பட்டயம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது தங்கத்திலான நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அங்கு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் அகழாய்வு நடைபெறுகிறது. அங்கு இதுவரை 80 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் தங்கத்தாலான காதணி கண்டுபிடிக்கப்பட்டது. திங்கட்கிழமை இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடியும், அதை சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து, பறவைகள் நீர் அருந்துவது போலவும், அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் இருந்தது. மேலும், அந்த குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 இரும்பு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இந்த பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்ததற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார் என தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் கூறுகிறார். எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் இருந்து உள்ளது என்றார்.