
கோவை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தை மாநகர காவல் ஆணையர் பலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போலீசாரின் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது போலீசார் குடும்பத்தினருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பணிக்கு செல்லும் காவலர்களின் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள காப்பகம், மனமகிழ் மன்றம் மற்றும் நூலகம் ஆகியவற்றை திறக்க திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையர் பலகிருஷ்ணன் இன்று காலை கோவை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம், நூலகம் மற்றும் காவலர் மன மகிழ் மன்றம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் போலீசாருடன் மன மகிழ் மன்றத்தில் கேரம் போர்டு விளையாடினார். தொடர்ந்து புதிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.