மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிப்பு

– பழைய கட்டணத்தை அமல்படுத்த சிறு, குறு தொழில் சங்கம் கோரிக்கை

மின்சார கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு தொழில்களை நலிவடைய செய்வதாகவும் கோவை மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கொடிசியா அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு தொழில் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கொடிசியா தலைவர் திருஞானம் பேசியதாவது: தற்போது மின் கட்டணத்தை 17 மடங்கு உயர்த்தியுள்ளதால் சிறு, குறு தொழில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் 17 சதவீதம் மின்சார கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் தமிழக அரசு புதிய மின் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை மின்சார கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல பீக் ஹவரான 8 மணி நேரத்திற்கு தொழிற்சாலைகளுக்கு 25 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் போடபட்டுள்ளதால் சிறு, குறு தொழிற்சாலைகள் கூடுதல் நிதிச்சுமை அடைந்து நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால், ஏற்கனவே போக்குவரத்து செலவு உள்ளது. தற்போது மின் கட்டணமும் அதிகமானால் தங்கள் உற்பத்தி செய்ய கூடிய பொருளின் செலவு மிகவும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் இந்தப் பொருட்களின் விலை உயர்வால், வெளி மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுப்படுதாகவும், இங்கு உள்ள உற்பத்தியாளர்கள் தங்களது ஆர்டர்களை இழக்க நேரிடுவதாகவும் தெரிவித்தார்.