‘டார்க்கத்தான் 2022’ ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் முதலிடம்

இந்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நடத்திய டார்க்கத்தான் 2022 என்ற தேசிய அளவிலான கணினி நிரல் மற்றும் மென்பொருள் உருவாக்கல் நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு மாணவர்கள் குழு நாட்டிலேயே சிறந்த இரண்டு அணிகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.

புது தில்லியில் கடந்த ஜூலை 19, போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி சுற்றில் பங்கு பெற்ற ஐஐடி டெல்லி, ஐஐடி கோவா, ஐஐடி கான்பூர், ஐஐடி புவனேஸ்வர் போன்ற தலைசிறந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களோடு போட்டியிட்டு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசுகளை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் இரண்டு மாணவர்கள் அணியினர் பெற்றுள்ளனர்.

டார்க் இணையத்தில் ‘போதை பொருள் கடத்தல் முயற்சிகளை கண்டுபிடித்து தடுத்தல்’ என்ற கருத்துருவினை உருவாக்கி முதல் இடத்தை பிடித்து ரூபாய் இரண்டரை லட்சம் ரொக்க பரிசினை கணினி மற்றும் பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் குமரகுரு, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் புவனேஷ் வென்றனர்.

கல்லூரியின் இரண்டாம் மாணவர் குழுவினர் ‘டார்க் இணையத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வலை பின்னலை அடையாளம் காணுதல்’ என்ற தலைப்பிலான கருத்துருவில் இரண்டாம் பரிசாக ரூபாய் 2 லட்சத்தினை தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர் அரவிந்த ஹரிஹரன், தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர் கெளதம், இயந்திரவியல் துறை மாணவர் கெளதம் ஆகியோர் வென்றனர்.

இந்த இரண்டு வெற்றி குழுக்களையும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் பிரியா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ஷோபனா ஆகியோர் வழிநடத்தினர்.

இந்த டார்க்கத்தான் 2022 மென்பொருள் உருவாக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த கருத்துருக்களை உருவாக்கி, கணினி நிரல் எழுதி மென்பொருள்களை உருவாக்கி முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய பேராசிரியைககளையும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலுருமாகிய மலர்விழி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை செயல் அலுவலர் சுந்தரராமன் மற்றும் கல்லூரி முதல்வர் ஜேனட் ஆகியோர் பாராட்டினர்.