உறுப்புதான விழிப்புணர்வில் தமிழகம் முன்னிலை!

– பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் சுப்பிரமணியம் பேச்சு

உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய மாநாடு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு முதன்மை விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் சிறப்பு விருந்தினராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி முதல்வர் சுப்பாராவ் விருந்தினர்களை வரவேற்றார். பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை உரை ஆற்றினார்.

மாநாட்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களை கௌரவிக்கும் விதமாக அமைச்சர்கள் நினைவு பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுப்பிரமணியன்: உடல் உறுப்பு தானம் என்பது தற்போது மிக அவசியமாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்த உடல் உறுப்பு தானம் தொய்வடைந்ததை அடுத்து தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் உடல் உறுப்பு தானம் பற்றிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிப்பதிலும், உறுப்புதான விழிப்புணர்விலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடலுக்கு பின் உறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர் அவர்களின் குடும்பத்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.