கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தமது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மேற்கொண்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள், காத்திருப்போர் பட்டியல், அதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவிற்கு வழிகாட்டி அமைப்பாக இருந்தது. அன்று முதல் இதுவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட கொடையாளர்கள் 1524 பேர். இதில் மொத்த உறுப்புகளின் பயன்பாடு 5557 ஆக உள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா முழுமைக்கும் இந்த பணி தொய்வடைந்து இருந்தாலும், தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும், கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திட்டத்தை விரைவுபடுத்த தெரிவித்துள்ளார்.

கொடையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதத்தில் மட்டும் 588 பேர் பயன்பெற்றுள்ளனர். 588 பேருக்கு உறுப்பு மாற்று பல வகைகளில் உதவியாக இருந்துள்ளது.

சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் 6483, ஈரலுக்காக 380 பேர், இதயம் 43 பேர், நுரையீரல் 42 பேர் கணையம் 2 பேர், கைகள் வேண்டி 23 பேர் காத்திருந்து வருகின்றனர். தமிழகம் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருந்தாலும் தேவைகள் அதிக அளவில் உள்ளது என தெரிவித்தார்.

குரங்கம்மை பாதிப்பு குறித்து அவர் கூறுகையில்: குரங்கம்மையால் 80 நாடுகள் பாதிப்படைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கம்மை இல்லை என தெரியவந்தது.

கேரளா எல்லையில் வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குரங்கமை பரிசோதனை செய்ய நம்மிடமே ஆய்வுக்கூடங்கள் வசதிகள் உள்ளது என்றார்.

நாளை முதல் கல்லூரிகளில் பூஸ்டர் டோஸ்:

கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 95.63% பேரும், இரண்டாவது தவணையை 88.62 % பேரும், பூஸ்டர் தடுப்பூசி 37 லட்சத்து 33 ஆயிரத்து 957 பேர் செலுத்தி உள்ளனர். சென்னையை தொடர்ந்து நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
33 வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. 50,000 இடங்களில் இது நடைபெற உள்ளது.

மருத்துவப் பணியிடங்களை நிரப்ப தீவிரம்:

தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. 4308 காலி பணியிடங்களை நிரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 200 வகையிலான பணிகள் உள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் நிதி:

கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்களுக்கு 36 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டங்கள் வர உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில்
விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையத்திற்கு 34 அரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.