சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலக ரஷ்யா முடிவு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு விலக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், தங்களுக்கென ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாகவும் கூறியுள்ளது.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

1998 ஆம் ஆண்டு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ரஷ்யா ஆகிய 5 உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம், புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, இதுவரை ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறியிருப்பது: 2024 க்குப் பிறகு ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது. ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

இந்த நிலையில் தான் தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முடிவை ரஷ்யா எடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்த ராணுவ நடவடிக்கை காரணமாக ரஷ்யா, அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதன் விளைவாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுருந்து விலகும் முடிவை ரஷ்யா எடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.