பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: என்ன உணவு வழங்கப்படும்?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7 அன்று முதலமைச்சர் ஸ்டாலின், அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காலையில் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலை உணவில் உப்புமா வகை, கிச்சடி வகை, பொங்கல் வகைகள் வழங்கப்பட உள்ளன. சத்தான சிற்றுண்டி வழங்க ஒரு குழந்தைக்கு தினசரி ரூ.8.25 என்று தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை உள்ளூா் சந்தையில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது சுய உதவிக்குழுக்கள் பஞ்சாயத்து கூட்டமைப்புகள் திணை, அரிசி பயிரிட்டால் அதையும் பயன்படுத்தலாம்.