பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகும் ‘தி லெஜண்ட்’

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த முதல் படமான தி லெஜண்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இந்த விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி தான் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளனர். மேலும் லெஜண்ட் சரவணாவே இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், மறைந்த நடிகர் விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் விஞ்ஞானியாகச் சரவணன் நடித்துள்ளார்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகப் போகிறது. படத்திற்க்கான முன்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. உலக அளவில் தி லெஜண்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.