மின்வாரியத்தின் மோசமான நிலைக்கு கடந்த ஆட்சியே காரணம் – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கோவையில் 6 வது புத்தக திருவிழா கொடிசியா வளாகத்தில் இன்று முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். சில புத்தகங்களையும் வாங்கினார்.

கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இதில் பெரியார், கலைஞர், அப்துல் கலாம், திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் வரும் 28 ஆம் தேதி 5000 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 2,50,000 தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளது. பயனுள்ள நூல்கள் இங்கு காட்சி படுத்தபட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது என்றார்.

தமிழக மின்வாரிய மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடு தான் இதற்கு காரணம். 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூ.16500 கோடி வட்டி செலுத்த கூடியளவிற்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது. மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. மின் மிகை மானிலம் என்று பொது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரம் முன் வைக்கபட்டது.

மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள கட்சிகள் மின்கட்டணம் அதிகம் உள்ள கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என பாஜகவை சாடினார்.

மக்களுக்காக மின்சார உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சி, சமையல் சிலிண்டர் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மின்சார கட்டணம் குறித்து எஸ்.பி.வேலுமணி பேசிய கருத்திற்கு, பதில் அளித்த அவர் அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அதிமுக அரசு அறிவித்தது.

ஆர்ப்பாட்டம் நடத்தும் இரு கட்சிகளும், சின்னங்கள் வேறு வேறு என்றாலும் ஓரே
இயக்கங்கள் தான் என கூறினார். தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் திமுக தேர்தல் வாக்குறிதகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட பின்பு நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்தார்.