கோவை அரசு கல்லூரி, ராம்கோ சிமெண்ட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், சிவில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி அளிக்கும் விதமாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு பொது மேலாளர் அனில்குமார் பிள்ளை மற்றும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் தாமரை ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கோவை மார்க்கெட்டிங் துணைப் பொது மேலாளர் சண்முகராஜா ஹரி, அரசு தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் பிரிவு துறைத் தலைவர் தேன்மொழி கலந்து கொண்டனர்

இது குறித்து அனில்குமார் பிள்ளை கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒரு சிறந்த பாலமாக இருக்கும். இதன் மூலம் அரசு கல்லூரியில் படிக்கும் சிவில் துறை மாணவர்கள் எங்கள் சிமெண்ட் உற்பத்தி ஆலையை பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவதோடு அங்கு எவ்வாறு சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்த அனுபவ மற்றும் தொழில்நுட்ப அறிவு அவர்களுக்கு கிடைக்கும்.

மேலும் அவர் கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிவில் என்ஜினியரிங் துறை மாணவர்களுக்கு சிவில் என்ஜினியரிங் துறையில் அவர்களின் சிந்தனை திறன் மற்றும் அறிவை மேம்படுத்த சிறந்த பேச்சாளர்களுடன் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படும். மேலும் இந்தியாவின் வருங்கால கட்டுமானதாரர்களாகிய அவர்களுக்கு எங்களின் புதிய தயாரிப்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.