நாளை முதல் மாஸ்க் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என, பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும்  20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, கோவையில் 55 உள்பட மொத்தம் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,366 ல் இருந்து 4,678ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அனு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலக பணியாளர்களும் ஜூன் 24ம் தேதி முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன்  இருக்குமாறும்  அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.