வளமான வாழ்க்கைக்கு நலமான எலும்புகள்!

கே.ஜி.மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்

நமது உடலில் உள்ள உறுப்புகள் இறப்புக்கு பின் சிதைந்து போவது இயல்பே. ஆனால் மண்ணில் புதைந்து பல ஆண்டுகள் ஆயினும் எலும்புகள் மட்டும் அழியாமல் இருப்பதை செய்திகளின் வாயிலாக காணமுடிகிறது. ஆராய்ச்சியின் போது கண்டறியப்படும் பழமை வாய்ந்த எலும்புகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ஒருபுறம் இப்படி இருக்க, இந்த எலும்பினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

உச்சி முதல் பாதம் வரை உடலில் வியாபித்திருக்கும் எலும்புகள் உடலின் ஆதாரமாக திகழ்கின்றன. அதில் அடிபட்டால், நொறுங்கினால், முறிந்தால் உடலின் இயக்கம் முடங்கும் நிலை ஏற்படுகிறது. சிறு மூட்டு வலி தொடங்கி, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோபொரோசிஸ் என எலும்பு தொடர்பான நோய்கள் மனிதர்களைப் பாதிக்கின்றன.

நமது உடல் எடையை மூட்டுகள், பாதம் மற்றும் இடை ஆகிய இடங்கள் தான் தாங்கிக் கொள்கின்றன. எனவே, எடை அதிகரிக்கும் போது, அழுத்தம் மூட்டுகளுக்கு ஏற்படுவதால் எலும்புகளும் தசைகளும் பலவீனமாகி திசுக்கள் வீக்கமடைகின்றன. இதனால் கால் மூட்டுகளில் வலி ஏற்படுகின்றன.

இதுதொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை இந்த சிறப்புக் கட்டுரையில் கே.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

எலும்புகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான காரணங்கள், எலும்பைப் பாதுகாக்கும் வழிமுறைகள், எலும்பு மற்றும் மூட்டு தொடர்பாக கே.ஜி மருத்துவமனை நடத்தும் முகாம் குறித்து மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவலின் தொகுப்பை காணலாம்.

சுயமருத்துவம் வேண்டாம்!

–  டாக்டர் பக்தவத்சலம், தலைவர், கே.ஜி.மருத்துவமனை

“முழங்கால் வலிக்கிறது”  என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். அதற்கு அவர்களின் எலும்பு இணையும் இடத்தில் உள்ள ஜாயிண்ட் தேய்மானம் அடைந்திருப்பதே காரணம். இந்த ஜாயிண்ட் தேய்மானம் அடைந்திருப்பதை கண்டறியவும், பிற பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய முழங்கால்களையும், தோள்பட்டைகளையும் எக்ஸ் ரே எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற பரிசோதனைகளையும் செய்த பின் என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிய முடியும்.

மூட்டு அல்லது எலும்புகளில் ஏதேனும் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகாமல் சுயமருத்துவம் எடுத்துக் கொள்ளாதீர்கள். கே.ஜி மருத்துவமனை பொது மக்களின் நலனுக்காக பல இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளது. தற்போது மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகளுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டம் மேற்கொண்டு அதனை செயல்படுத்த உள்ளோம்.

கே.ஜி மருத்துவமனையில் மே 23 முதல் 28 வரை இம்முகாம் நடைபெறும். எலும்பியல் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை வழங்க தயாராக உள்ளனர். மேலும் சலுகை விலையில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினை இருந்தால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு நலம் பெறவேண்டும்.

முறையான வாழ்வினால் நோயை தவிர்ப்போம்!

–   டாக்டர்  மசூத் பாஷா, எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

இரண்டு எலும்புகள் இணையும் இடத்தில் உள்ள ‘கார்டிலேஜ்’ என்ற ரப்பர் போன்ற பகுதி தேய்மானம் அடைவதை தான் நாம் மூட்டு தேய்மானம் என்கிறோம். அதிக தூரம் நடத்தல், அதிக வேலை செய்வது போன்ற காரணத்தினாலும், மூட்டில் காயம் ஏற்பட்டு கார்டிலேஜ் பகுதி பாதிப்பு அடைந்திருந்தாலும் அதன் அடர்த்தி குறைந்திருக்கும். இதனால் தான் மூட்டு, தேய்மானம் அடைகிறது.

நமது உடலில் எங்கெல்லாம் இரு எலும்புகள் இணைகிறதோ, அங்கு மூட்டு தேய்மானம் ஏற்படும். ஆனால் இடுப்பு, மூட்டு, முதுகு தண்டில் பொதுவாக மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.

விளையாடும் போதோ அல்லது விபத்தில் அடிபடும் போதோ எலும்பு முறிவு, ஜவ்வு கிழிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு ஜாயிண்ட் பிரச்சினை இல்லாமல் தசை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சமீபகாலமாக  ஆஸ்டியோ போரோசிஸ் என்ற எலும்பு மெலிதல் நோய், அதிக அளவில் மனிதர்களைத் தாக்குகிறது. எலும்பின் உறுதித்தன்மை பலவீனமடைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகிறது.

மூட்டு தேய்மானம் அடைந்து, ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டி சென்று விட்டால் மூட்டில் தேய்மானம் அடைந்த கார்டிலேஜ் பகுதியை எடுத்து விட்டு அதற்கு பதிலாக இருபுறத்திலும் மெட்டல் பொருத்தப்பட்டு, நடுவில் பிளாஸ்டிக் போன்ற பொருள் வைக்கப்படுகிறது.

கை, கால், இடுப்பு உள்ளிட்ட மூட்டுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பதிலாக செயற்கை மூட்டுக் கருவி பொருத்துவதையே ’எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை’ என்று குறிப்பிடுகிறோம்.

சிலருக்கு மூட்டு தேய்மானம் ஆகிவிட்டால் கால் வளைந்து காணப்படும். மேற்சொன்ன சிகிச்சையை மேற்கொள்ளும் போது கால் சீரான நிலைக்கு திரும்புகிறது.

முன்பெல்லாம் ஒரு இடத்தில் தேய்மானம் அடைந்தாலும் மூட்டை முழுவதும் மாற்ற வேண்டி வரும். ஆனால் இப்பொழுது இதில் பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

கால் மூட்டு நடக்கும்போதும், நிற்கும்போதும் உடல் எடையை தாங்கும் திறன் கொண்டது. எனவே வயதாகும் போது கால் மூட்டு தேய்ந்து போவது இயல்பான ஒன்று தான்.

அதனால், இப்போது உள்ள இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தற்போது இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், சரியான உணவு பழக்கம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வயதாகும் போது நமது எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை இருந்தாலும் ஜாயிண்ட் பிரச்சினைகள் வரலாம்.

தொடர்ச்சியாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு முதுகுவலி, தசைபிடித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, சரியான தோரணையில் அமராமல் சாய்ந்தோ அல்லது கழுத்தை அதிகமாக முன்புறம் கொண்டு வந்து கணினியில் பணியாற்றுவது ஆகியவையும் முதுகு, கழுத்து, தோள்பட்டை வலியை உண்டாக்கும்.

மேலும், உட்காரும்போது நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். இதன் மூலமும் சில பாதிப்புகளை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் பணியாளர்களுக்கு ஏற்ற மாதிரியான நாற்காலிகள் இருக்க வேண்டும். அப்போது தான் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் பொழுது முதுவலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படாது. எப்படி அமரவேண்டும் என தெரிந்தாலே மேற்கூறிய பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

உடல் எடை அதிகமாக இருந்தால், மொத்த எடையையும் மூட்டு தான் தாங்கும். இவர்களுக்கு எளிதில் மூட்டு வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். தொடர்ச்சியாக அதிகமான பளுவை தூக்கினாலும் முதுவலி, தசை பிடிப்பு போன்றவை ஏற்படும்.

எலும்பு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அப்போது தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நேரடியாக அணுகி, பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண முடியும்.

வலியை அலட்சியம் செய்யாதீர்கள்!

–   டாக்டர்  நலந்தா, எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் எலும்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது. இது அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நிற்பதில், நடப்பதில் கூட சிரமத்தை உண்டாக்குகிறது.

இந்தியர்களுக்கு முழங்கால் கீல்வாதமும், மேலை நாட்டவர்களுக்கு இடுப்பு கீல்வாதமும் பொதுவாக காணப்படுகிறது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உடல் எடையை அதிகரிப்பதுடன், தசைகளை வலுவிழக்க செய்யும். இளைஞர்கள் தற்போது உபயோகப்படுத்தும் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து செல்லும் விதத்தினால் அவர்களுக்கு முதுகு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பிறப்பு முதல் வயதாகும் வரை எலும்பு தொடர்பான பல நோய்கள் உள்ளன. சில பரிசோதனைகள் மூலமாக கருவிலேயே குழந்தைக்கு எலும்பு தொடர்பான குறைபாடுகளை கண்டறியலாம்.

பெண்கள் அதிகளவில் ஆஸ்டோபோரோசிஸ் நோயினால் பாதிப்படைகின்றனர். மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் உற்பத்தி குறைவதால் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து குறைந்து, எலும்பின் உறுதி தன்மையும் குறைகிறது.

எலும்பு தொடர்பான பிரச்சனை வருவதற்கான அடிப்படைக் காரணமாக இருப்பது வைட்டமின் டி குறைபாடு. சூரிய ஒளியின் மூலம் நேரடியாக வைட்டமின் டி கிடைப்பதால்  சூரிய ஒளி படுமாறு சில நிமிடங்கள் இருக்கலாம் அல்லது நடக்கலாம். போதிய உடற்பயிற்சி செய்தல், கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும்.

நடைப்பயிற்சி எலும்புகளை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க உதவுவதோடு, இதயம் தனது செயலை சீராக செய்யவும் உதவுகிறது. மூளைக்கும், உடம்பிற்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தற்போது பலருக்கும் முதுகுவலி ஏற்படுவதைக் காணமுடிகிறது. குறிப்பிட்ட பணி செய்பவர்கள் என்றில்லாமல் அனைத்து துறைகளில் பணிபுரிபவர்களிடமும் கூட பொதுவாக முதுகுவலி காணப்படுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஆளாகக் கூடும். உட்காரும் போது நேராக உட்காரமலிருத்தல் மற்றும் வேலையின் காரணமாக மட்டும் முதுகுவலி ஏற்படுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே உடலில் வலி ஏதேனும் ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் இருக்க வேண்டும்.