“அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” – கீழடி சுடுமண் சிற்பம் குறித்து அமைச்சர் ட்வீட்

கீழடியில் கண்டறியப்பட்ட சுடுமண் சிற்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்ற பாடல் வரியை குறிப்பிட்டு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட அழகிய பெண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் சிற்பங்கள் என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பம்.

மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. 7வது கட்ட அகழ்வாய்வுகளில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய 18,000-க்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் வாயிலாக தமிழர்களின் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறியப்பட்டதால், கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினர். தற்போது இந்த அகழ்வாய்வுப் பணியின் போது சுடுமணல் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பை கூறும் விதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு,

“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?”

கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம் என பதிவிட்டுள்ளார்.