குளத்தேரி நீர் மாசுபாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் – இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்

கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள குளத்தேரியில் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் 55 வது வார்டிற்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், மாநகராட்சியின் 61 வது வார்டிற்கு உட்பட்ட திருச்சி சாலை குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும், குளத்திற்கு செல்லும் கால்வாயில் நிறைந்திருந்த குப்பைகள் ஜெசிபி எந்திரம் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டது.

குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் இடங்கள் மீட்கப்படும் எனவும் ஆய்வின் போது அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர் மாரிசெல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, பொறியாளர் சுந்தர்ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் சிங்கை சிவா, ஆதி மகேஷ்வரி மற்றும் திராவிடமணி, இராமகிருஷ்ணன், பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீசங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.