பருத்தி உற்பத்தி அதிகரித்தல்: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய அகில இந்திய பருத்தி அபிவிருத்தி திட்ட வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் வீரிய ஒட்டு பருத்தி தொழில் நுட்பத்தின் பொன் விழா நிகழ்வு நடைபெற்றது. மார்ச் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி குத்து விளக்கேற்றி நிகழ்வை துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், வீரிய ஒட்டு பருத்தி தொழில் நுட்பத்தின் பொன் விழா நிகழ்வு மற்றும் நூற்றாண்டு காணும் பருத்தி துறைக்கு வாழ்த்து தெரிவித்து வீரிய ஒட்டு பருத்தியின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

மேலும் அவர் ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் விவசாயிகள் விஞ்ஞானிகள் இடையே உள்ள இடைவெளியை குறைத்து பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தினார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக பொது செயலாளர் திரிலோசன் மொகபத்ரா தனது தலைமை உரையில், பருத்தியில் முதல் வீரிய ஒட்டு ரகமான எச்4 யை கண்டறிந்த சி.பி. பட்டேல் அவர்களை நினைவு கூர்ந்தார். மேலும் சீர்மிகு தொழில் நுட்பங்களான அடர் நடவுமுறை, ஒற்றை மற்றும் இயந்திர முறை அறுவடை மற்றும் மரபணு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பருத்தியில் மகசூலை அதிகரிக்க வலியுறுத்தினார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக இணை இயக்குனர் டி.ஆர்.சர்மா பேசுகையில், மரபணு வேறுபாட்டிற்கான முன் இனப்பெருக்க வரிசைகளை உருவாக்குதல் மற்றும் பருத்தியின் பயிர் இனப்பெருக்க நோக்கங்களில் தயாரிப்பு கயவிவரம் சேர்க்கப்பட வேண்டுமென கூறினார்.

இந்திய பருத்தி அபிவிருத்திக்கழக தலைவர் சி.டிமாயி, பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் கே.எஸ். சுப்பிரமணியன், முனைவர். ஒய் ஜி.பிரசாத், முனைவர். சுஜாதா சக்சேனா, முனைவர் ஜி. ஹேமபிரபா, உள்ளீட்டோர் விழாவில் கலந்துக்கொண்டனர்.