டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழகம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரியவை:
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்; உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது; நதிநீர் இணைப்பு திட்டம், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை பெறுவது, இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களை கையாள்வது, பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: Hindu tamil